Showing posts with label love. Show all posts
Showing posts with label love. Show all posts

"த ரோடு ஹோம்" ஒரு காதல் காவியம்..

Wednesday, March 4, 2009
எவ்வளவு தான் தேர்ந்து எடுத்து பார்த்தாலும் ஒரு சில திரைப்படங்களே எழுதுவதற்கு தூண்டுகிறது.இன்று " ரோடு ஹோம் " என்ற சீன திரைப்படம் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தியது.பாவோ ஷி எழுதிய 'Remembernce' நாவலை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தை ஒரு காதல் காவியமாகவே செதுக்கி உள்ளார் ஷாங் யுமு.

கிராமத்தில் ஆசிரியராக வாழ்ந்து மறைந்த தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள நகரத்திலிருந்து கிராமத்துக்கு வரும் மகனின் எண்ணங்களில் இருந்து துவங்குகிறது திரைக்கதை.தன் தாய் தந்தையின் இளமைப்பருவ காதலை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் நேரங்களை ஒளிப்பதிவின் மூலம் நம் மனதிலும் காதல் உணர்வை தூண்டுகிறார் ஷாங் யுமு.

முதல்
பார்வையில் காதலில் சிக்கிக்கொள்ளும் ஷாங் ஸியின் அப்பழுக்கற்ற காதலே படத்தின் ஆதரப்பகுதி, சிறிய புன்னகை,பார்வை பரிமாற்றங்கள் மூலம் காதலை வெளிப்படுத்தும் கதாநாயகியின் அழகே தனி.காதலனை பார்த்து விட்டு குழைவுடன் நடக்கும் காட்சிகளில் ஷாங் ஸியின் நடிப்பை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. சிறிதும் நாடகத்தன்மை இல்லாத கிராமத்து காதலை மிகவும் அழகாக பின்னணி இசையுடன் அற்புதமாக பார்வையாளர்களுக்கு படைத்திருக்கிறார்கள் . இதுவரை காதலிக்காதவன் கூட காதலின் வெள்ளத்தில் கரைந்து போகும் அளவிற்கு அமைந்திருக்கிறது காட்சிகள்.என்னுள்ளும் அந்த உணர்வு ஏற்பட்டது .

ஒரு ஆசிரியனின் மகனாக இருப்பதால் என்னுள் ஏற்பட்ட தாக்கம் அதிகம் என்றாலும்,படத்தை பார்க்கும் ஒவ்வொருக்கும் கடைசி பத்து நிமிடங்களில் இடம் பெற்றுள்ள காட்சிகள் நெஞ்சை கசக்கிவிட்டு போகும்.தன் தாயின் விருப்பத்திற்காக தந்தை பாடம் நடத்திய அதே இடத்தில் நின்று பாடம் நடத்தும் மகனின் குரல் கேட்கிறது,அதுவரை கணவனின் கம்பீரக் குரலில் ஈர்க்கப்பட்டு பள்ளிக்கு வருபவள் அன்று மகனின் குரல் கேட்டு, பள்ளியை நோக்கி ஓடி வருகிறாள்.அந்த நிமிடங்களில் அவளுடைய நாற்ப்பது ஆண்டு காதல் வெளிப்பதுகிறது.கடந்த காலத்தை அசைப்போட்டு படம் முடிகிறது கண்ணீர் துளிகளுடன் . நேரம் கிடைத்தால் கண்டிப்பாக இப்படத்தை ஒருமுறை பாருங்கள் ..